Friday 8 March 2013

திருமணத்தில் விசுவாசிகள் செய்யும் நான்கு பாவங்கள்

by Vijay Kumar on Saturday, November 27, 2010 at 8:16pm ·
எழுதியவர் சகோ.பிரசன்
 
(இது சகோ.பிரசன் சமீபத்தில் எழுதிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)



1. அவுக என்ன ஆளுக?...

ஜாதிஅமைப்பு இந்தியாவில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகிவிட்டது. வெளிநாட்டில் இனப்பிரச்சனை (Racism) எப்படி இருக்கிறதோ அதுபோலவே இந்தியாவில் ஜாதீயம். இந்த ஜாதிஅமைப்பு இந்து மதத்தின் வருணாசிரமக் கோட்பாட்டிலிருந்து தோன்றியது.  மனிதன் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வருணங்களாகப் பிரிக்கப்படுகிறான் அது இன்னும் பல உபஜாதிகளாகப் பிரிகிறது. தமிழகத்தில் நாடார், வன்னியர், தேவர், பள்ளர், பறையர், வெள்ளாளார் என்று பற்பல ஜாதிகளும் அவற்றின் உபபிரிவுகளும் உள்ளன. இந்த ஜாதிகளில் சில உயர்ந்தவை என்றும் சில தாழ்ந்தவை என்றும் பிரிக்கப்பட்டு மக்களிடையே பிரிவினை வளார்க்கப்பட்டு வருகிறது.

இதில் மனதைக் காயப்படுத்தும் விஷயம் என்னவென்றால் பெரும்பாலான கிறிஸ்தவர்களும் இன்னும் இந்த ஜாதி அமைப்புக்குள்ளேயே தங்களைக் கட்டிவைத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் பெரும்பாலானவை  பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களாகும் (Arranged Marriages). பெற்றோர்கள் பொதுவாக தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் ஜாதிக்குள்ளேயேதான் வரன்களைப் பார்ப்பார்கள்.ஒரு வெள்ளாளர் இன்னொரு வெள்ளாள இனத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்வார், ஒரு நாடார் இன்னொரு நாடார் இனப்பெண்ணைத்தான் திருமணம் செய்வார். கிறிஸ்தவத்திலும் இன்று இதுவே நடக்கிறது.

ஒருவேளை விரும்பும் விதமான வரன் ஒரே ஜாதிக்குள் தற்செயலாக அமைந்தால் அதில் தவறொன்றுமில்லை. ஆனால் திருமணம் செய்வதே ஜாதி அடிப்படியில்தான் என்று வாழும் அளவுக்கு உங்கள் இருதயத்தில் ஜாதி சிங்காசனமிட்டு அமர்ந்திருக்குமானால் கிறிஸ்தவர்களே! நீங்கள் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டவர்தானா என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

விசுவாசிகளான பெற்றோர்களே! உங்கள் பிள்ளைக்கு உங்கள் (பழைய) ஜாதிக்குள்ளேயே வரன் தேடுகிறீர்களா? உங்கள் பதில் ”ஆம்” என்றிருக்குமானால் நீங்கள் இன்னும் இரட்சிக்கப்படவே இல்லை. ஏனெனில் யெகோவா தேவன் உங்களைப் படைத்தார் என்றே நீங்கள் நம்பவில்லை. நீங்கள் ஜாதியை நம்புகிறபடியால் பிரம்மாதான் உங்களைப் படைத்தார் என்றல்லவா சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்??

உங்களைப் படைத்தவர் கர்த்தர் என்று வாயில் சொல்லிப் பயனில்லை. உங்கள் கிரியைகளில் சொல்லுங்கள்.

கிரியையில்லாத விசுவாசம் செத்தது (யாக் 2:20)

2. இதெல்லாம் நல்ல நாள் பெரிய(!) நாள் பாத்துத்தான் செய்யணும்

பல கிறிஸ்தவர்கள் சனிக்கிழமைகளில் திருமணம் செய்யமாட்டார்கள். 13-ஆம் தேதி திருமணம் செய்தால் துரதிருஷ்டம் என்பது இன்னொரு நம்பிக்கை. இன்னும் தங்கள் பிளளைகளின் ஜாதகத்தையும் வரன்களின் ஜாதகத்தையும் தூக்கிக்கொண்டு பொருத்தம் பார்க்க ஜோசியர்களிடம் ஓடும் கிறிஸ்தவர்களும் உண்டு.

இப்படி செய்யாதீர்கள் என்று சொன்னால், மழலை இயேசுவைப் பார்க்க வந்த ஞானிகளே நட்சத்திரத்தைப் பார்த்துத்தானே வந்தார்கள் என்பார்கள். நீங்கள் பார்க்கக்கூடாது என்று சொல்லும் ராகு கேது போன்ற நட்சத்திரங்களையும் ஆண்டவர்தானே படைத்தார் என்ற பல அறிவுபூர்வமான(?) கேள்விகளையெல்லாம் எழுப்புவார்கள்.

விசுவாசப் பிள்ளைகள் இதை எதிர்த்துக் குரல் கொடுத்தாலும் ”பெரியவுக சொல்றதக் கேளு, கல்யாணங்றது ஆயிரங்காலத்துப் பயிறு, இதெல்லாம் நல்ல நாள் பெரியநாள் பாத்துத்தான் செய்யணும்” என்பார்கள். கர்த்தர் படைத்த எல்லா நாளும் நல்ல நாள்தானே, கெட்ட நாளைப் பிசாசா படைத்தான்? பெரிய நாள் என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை. எல்லா நாளுக்கும் 24 மணி நேரந்தானே??

கட்டங்களை நம்புவதைவிட கர்த்தரை நம்புங்கள், நட்சத்திரங்களை நம்புவதைவிட அவற்றைப் படைத்து, பேரிட்டு அழைக்கும் பிரமாண்டமான ஆண்டவரை நம்புங்கள்.

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம். தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய். (உபா 18: 9-13)

3. பொண்ணு வீட்ல என்ன செய்வாக??....

வரதட்சிணை என்பது கிறிஸ்துவ வட்டாரத்திலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் இன்னொரு பிரதானப் பிரச்சனை. அன்பளிப்பு என்ற பெயரில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து பணம், நகை, அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை லவட்டிக் கொள்வதற்குப் பெயர்தான் வரதட்சிணை. இதைச் செய்யும் மணமகனுக்குப் நேர்மையான, பொருத்தமான ஒரு பெயர் கொடுக்க வேண்டுமானால் அவனுக்கு இந்தப் பெயர்தான் கொடுக்கலாம் “விலைமகன்”

4. கர்த்தருக்கு விரோதமான குற்றப்பத்திரிக்கை

வருணாசிரம தருமத்தில் இந்து மதத்தால் போதிக்கப்பட்ட ஜாதி அமைப்பின்படி தன் பிள்ளைக்கு வரன் பார்த்துவிட்டு, ஜோதிடரை அணுகி நல்ல நாள் பார்த்துவிட்டு, வரதட்சிணை என்ற பெயரில் ஒரு பகல் கொள்ளையும் அடித்துவிட்டு நான்காவதாகச் செய்யும் பெரும்பாவம் திருமணப்பத்திரிக்கையில் ”இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது” போடுவதாகும்.

குற்றம் செய்ததுமல்லாமல் அதில் கர்த்தரையும் பங்காளியாக்குகிறார்கள். நீங்கள் அச்சடித்த திருமணப் பத்திரிக்கையின் ஒரு பிரதி கர்த்தர் கையிலும் இருக்கிறது. அது கடைசி நாளில் உங்களுக்கு விரோதமாக சாட்சி சொல்லும்.

நீங்கள் மேற்கண்ட நான்கு பாவங்களையும் செய்பவராக இருந்தால் உடனே கர்த்தரிடத்தில் மனந்திரும்புங்கள். உங்களை மன்னித்து, இரட்சித்து உங்களை அன்பாய் அணைத்துக் கொள்ள உங்கள் பரமப்பிதா ஆவலாய் இருக்கிறார்!!

No comments:

Post a Comment