Friday 8 March 2013

துர் உபதேசங்கள் உருவாவது எப்படி?

by Arputharaj Samuel on Wednesday, November 23, 2011 at 11:46pm ·
சபையின் ஆரம்ப கால முதலே தவ்றான உபதேசங்கள் சபைக்குள் நுழைந்துவிட்டன. இன்னும் சொல்லப் போனால் அப்போஸ்தலர்கள் காலம் முடிவதற்கு முன்பே கள்ள உபதேசங்கள் முளைத்துவிட்டன. வெளிப்படுத்தல் புத்தகத்திலும் கூட் பல துர் உபதேசங்கள் சபையில் இருப்பதை ஆண்டவர் சுட்டிக் காட்டுவதை நாம் காணலாம். விதை விதைக்கும் எல்லா இடங்களிலும் களையும் முளைக்கும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் வேத வசனத்தில் தெளிவுள்ளவர்களாய் இருக்கவேண்டும். போதகர்களும் வேத வசனத்தின்படி சரியாய் பகுத்து போதிக்கவேண்டும். இஷ்டப்படி உளறிக் கொட்டி உபதேசமாக்கிவிடக் கூடாது. இக்கட்டுரை கண்களை தெளிவிக்கும் கலிக்கமாக இருக்கும்.

துர் உபதேசங்களின் பிறப்பிடம்
1. வேத வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்

2.தங்கள் சுய கருத்துக்கு ஏற்ப வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக்குதல்

3.வேத வசனங்களின் அடிப்படை போதனையையே நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக்குதல்

4.சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்.

5.தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்

தவறான போதனை யாரிடம் இருந்து வரும்?

தவறான போதனை எவரிடமிருந்தும் வரலாம் என்பது சற்று அதிர்ச்சியளிக்கக் கூடிய கசப்பான உண்மைதான். ஆனபடியால் எல்லாருமே தவறான போதனையைத்தான் செய்கிறார்கள் என்ற கள்ள உபதேசக்காரர்களின் கூற்றை நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எவரும் தவறு செய்யும் ஆபத்து உள்ளது என்பதையே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்படும் ஊழியர்களும் தவறாய் போதிக்கும் ஆபத்துக்கள் உண்டு. வல்லமையான ஒரு ஊழியர் மூலம் பலத்த செய்கைகள் திரளாய் நடக்கும்போது அவருடைய போதனைகள் யாவும் சரியே என்று கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டுவிடக் கூடாது. ஆனால் வழக்கமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக அற்புதங்கள் ஆவிக்குரியவர்களின் கண்களை மங்கச் செய்து நிதானிப்பை மழுங்கச் செய்கின்றன. ஒருவர் தேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்கும்போது தேவன் அவரை கிருபையாய் பயன்படுத்த ஆரம்பிக்கிறார். அவ்ருக்கு இருக்கிற திறமைகளினிமித்தமாகவோ அல்லது அவர் அதிக வசனம் தெரிந்தவர் என்பதினால் அல்ல கிருபையினால் மாத்திரமே தேவன் பயன்படுத்துகிறார்.

இதற்கு சரியான உதாரணமாகக் கூற வேண்டுமானால் பாலாசீர் லாறி என்பவரைக் கூறலாம். என்னை கிறிஸ்துவுக்குள் நடத்திய மூத்த போதகர் பாஸ்டர் கே.ஜே ஆபிரகாம் என்பவர் அவரைக் குறித்து அடிக்கடி கூறுவதுண்டு. ஆரம்ப நாட்களில் பாலாசீர் லாறிக்கு பிரசங்கிக்க சரியாக வருவதில்லை. ஆனால் இரவு நேரத்தில் எல்லாரும் படுக்கச் சென்றால் இவர் மாத்திரம் முழங்கால் படியிட்டு ஆண்டவரே கிருபை தாரும் என்று தேவனிடத்தில் மன்றாடுவார். காலையில் எல்லாரும் எழும்பும்போது பார்த்தாலும் அவர் இரவில் ஆரம்பித்த அதே ஜெப நிலையில்தான் இருப்பார். நான் கேள்விப்பட்டவரையில் இந்தியாவில் தேவன் பயன்படுத்திய மனிதர்களில் பாலாசீர்லாறி போன்று எவரையும் பயன்படுத்தவில்லை என்று உறுதியாகக் கூறுவேன். சாம்பிளுக்கு ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். இவருடைய கூட்டங்களில் திரளாய் அற்புதம் நடைபெறுவதுண்டு. இவருடைய நிழல் படும் இடங்களில் எல்லாம் அற்புதம் நடந்தது. அதற்காக இவருடைய நிழல் அனேகம் பேர் மீது பட வேண்டும் என்பதற்காக பெரிய விளக்குகள் மூலம் ஏது செய்தனர். ஆனால் இவரின் முடிவு என்ன? திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறினார். பின்பு சிறிது காலத்தில் கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒன்றே என்றார். அதன்பின்பு நானே கலியுகக் கல்கிபகவான் என்று கூறினார். தனக்கு மரணம் கிடையாது என்று கூறினார். சொல்லி சில நாட்களிலேயே மரித்தும் போனார். இன்றும் இவருடைய ஆசிரமம் எங்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. வஞ்சிக்கப்பட்ட ஒரு கூட்டம் உலக மக்கள் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றனர் கூழையும் கஞ்சியையும் குடித்துக் கொண்டு.

சரி நாம் துர் உபதேசங்களின் பிறப்பிடத்தை சற்று ஆராயலாமா?
1. வேத வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று மொடவாதம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். வேத வசனத்தின் உண்மையான பொருளை விளங்கிக் கொள்ளாமல் இவர்களின் தலையில் உதிப்பது எதுவோ அதையே உபதேசமாக்குகின்றனர். இப்படிப்பட்ட தவறான புரிந்து கொள்ளுதல்களுக்கு பல உதாரணங்களை நாம் வேதாகமத்திலிருந்தும் சரித்திரத்திலிருந்தும் உதாரணமாகக் கூறலாம். உதாரணமாக அந்திக் கிறிஸ்து என்ற பதத்தை எடுத்துக் கொள்வார்கள். இதில் அந்தி என்பது மாலையைக் குறிக்கிறது. அப்படியானால் கடைசிக் காலத்தில் எழும்பும் கிறிஸ்துதான் அந்திக் கிறிஸ்து என்பர். ஆனால் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்பதுதான் அந்திக் கிறிஸ்து என்ற பதத்தின் சரியான பொருள். இப்படிப்பட்ட குழப்பங்கள் துர் உபதேசங்கள் என்னும் அரசியலில் சர்வ சாதாரணம். நாம் கண்டு கொள்ளவேக் கூடாது.

2.தங்கள் சுய கருத்துக்கு ஏற்ப வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக்குதல்

போதிப்பவர் எப்போதும் வேதாகமத்தின் கருத்தையே வலியுறுத்தி போதிக்க வேண்டும். தன் சொந்தக் கருத்தை நிலை நிறுத்துவதற்காக வேதத்தை பயன் படுத்தினால் அது துர் உபதேசத்தில் விட்டுவிடும். பொதுவாக அமெரிக்க அரோப்பிய நாடுகளில் பாவம் குறித்து உங்களிடம் ஏதேனும் புத் சரக்கு இருந்தால் உங்கள் காட்டிலே மழைதான். திரளான பேர் உங்கள் சபையில் சீக்கிரம் சேர்வர். நீங்கள் செய்ய வேண்டியது பாவத்தைக் குறித்து கடுமையாக பேசாமல் பாவம் செய்வது தவறல்ல என்று போதிக்க வேண்டும். அவ்வளவுதான். அமெரிக்காவில் ஒரு போதகர் இப்படியாகச் சொன்னார். ஆண்டவராகிய இயேசு அனைத்துப் பாவங்களுக்காகவும் மரித்து விட்டார். அதாவது நாம் செய்த செய்து கொண்டிருக்கிற செய்யப் போகிற பாவங்கள் எல்லாவற்றிற்காகவும் சிலுவையில் கிரயம் செலுத்திவிட்டார். ஆகவே நாம் இஷ்டம் போல வாழலாம். உலக சிற்றின்பங்களில் திளைக்கலாம் என்பது இவரின் போதனை. நடந்தது என்ன தெரியுமா? அவரது சபையில் சீக்கிரமே ஏராளமானோர் இணைந்தனர். இதுபோல சபைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கை உள்ளவர்கள் ஒருவரும் உங்களுக்கு போதிக்க வேண்டுவதில்லை, அந்த அபிசேகமே உங்களுக்கு சகலத்தையும் குறித்து போதிக்கிறது என்ற வசனத்தை காட்டி திசை திருப்ப முயல்வர். ஆனால் சபை கூடி வருதல் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். இதன் சுவையை உணர்ந்த அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த கிறிஸ்தவன் ஒழுங்காய் தவறாது சபைக்கு செல்வான். உண்மைக் கிறிஸ்தவனால் கூடி ஆராதிக்காமல் இருக்க முடியாது.

3.வேத வசனங்களின் அடிப்படை போதனையையே நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக்குதல்

இதற்கு பல உதாரணங்களை வேதத்திலிருந்தே கூறலாம். ஸ்திரீயை தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது ( 1கொரி.7:1) - அப்படியனால் ஒருவரும் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாதா? 2.அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அனேகர் போதகராகாதிருப்பீர்களாக (யாக்.3.1) - அப்படியானர் ஒருவரும் போதகராகக் கூடாது! இப்படிப்பட்ட ஒருவசன உடும்புகள் துர் உபதேசங்களில் ஏராளம் உண்டு. ஏழாம் நாள்
ஓய்வுநாள் சபையாரும் கூட இப்படிப்பட்ட உபதேசக் குழப்பத்தில் ஊறினவர்கள்தான்.

4.சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்
வேதாகமே எந்த கிறிஸ்தவ உபதேசத்திற்கும் அடிப்படியாக இருக்கவேண்டும். மாறாக தாங்கள் கண்ட சொப்பனங்கள், தரிசனங்கள், வெளிப்பாடுகளின் அடிப்படையில் வேதாகமத்திற்கு புதிய விளக்கம் கொடுக்க முயல்வது என்றுமே ஆபத்தானது ஆகும். தேவன் மனிதனுக்கு சொல்ல வேண்டிய நற்செய்தியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சொல்லிவிட்டார். பரிசுத்த ஆவியானவர் பல ஆவிக்குரிய இரகசியங்களை நிருபங்களில் எழுதியுள்ளார். இதற்கு மாறாக கர்த்தர் எனக்கு புதிதாக வெளிப்படுத்தினார் என்று யாராவது கூறினால் அது வேதத்திற்கு ஒத்திருக்கிறதா என்பதுதான் நாம் செய்ய வேண்டிய முதலாவது வேலை. தேவன் ஒருபோதும் மாறாதவர். அவர் தம் வேதாகமத்தில் இருப்பதற்கு மாறாக எதையும் கூறுவதில்லை.

வில்லியம் பிரென்ஹாம் என்கிற அடிக்கடி தரிசனம் கண்ட ஊழியரை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இவரும் ஒரு காலத்தில் பிரபலமான அற்புதங்களைச் செய்யும் பிரசங்கியார். பிரச்சனை என்ன வெனில் இவர் கண்ட தரிசனங்களை உபதேசமாக்கியதுதான். இன்று பல பிரிவுகளாக பிரிந்து சிதறி கிடக்கும் இவரைப் பின்பற்றுபவர்கள் ஏராளம் ஏராளம். தரிசனங்கள் சொப்பனங்கள் வெளிப்பாடுகள் என்று வரும்போது நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நாம் நம்ப வேண்டியது வேதாகமத்தை மாத்திரமே. அதுவே நம் அஸ்திபாரம். நாம் காண்கிற கேட்கிற கேள்விப்படுகிற சொப்பனங்கள் தரிசனங்கள் வெளிப்பாடுகள் அல்ல.

5.தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்

தேவன் ஒரு சிலரை சில குறிப்பிட்ட அனுபவங்கள் மூலமாக நடத்துகிறார். அதற்காக அவர் அதையே உபதேசமாக்கிவிடக் கூடாது. ஒரு தேவ ஊழியர் தன் தலைமுடியை பராமரிப்பதில் அதிக நேரம் பணம் செலவழித்தாராம். ஒரு நாள் தேவன் அவரை மொட்டை அடிக்கும் படிக் கூறினாராம். மொட்டையடித்த அந்த ஊழியர் எல்லாரும் என்னைப் போல மொட்டையடிங்கள் என்று சபையில் போதித்தால் எப்படியிருக்கும். ஆனால் இன்று பல ஆவிக்குரிய சபைகளிலும் கூட இந்த போக்கை நாம் காணலாம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்பாய் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இல்லையேல் வஞ்சிக்கப்பட்டு ஏமாந்துவிடவ் ஏண்டியதுதான். எனக்கு மேற்சொன்ன சம்பவத்தை வாசிக்கும் போது சிறுவயதில் படித்த மொட்டை வால் நரி என்ற பஞ்ச தந்திர கதைதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் கதையில் விபத்து ஒன்றில் தனது வாலை இழந்த ஒரு நரி அந்தக் காட்டிலிருந்த அனைத்து நரிகளும் வாலை வெட்டிக் கொண்டு மொட்டையாக இருக்க தந்திரம் செய்ததாம். அது போல வஞ்சிக்கப் பட்ட பலர் தங்களோடு கூட்டு சேர ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கின்றனர். மேலே நாம் கண்டவை எல்லாம் ஒரு சாம்பிள்தான். நாம் விழிப்பாயிருந்தால் எவரும் நம்மை விழத்தள்ள முடியாது. நாம் எளிதாய் தவறான உபதேசங்களை அடையாளங் கண்டு கொள்ளலாம். என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று துணிகரங் கொண்டு எவரும் கள்ள உபதேசங்களில் மாட்டிவிடாதீர். பிறகு ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகிவிடும். தேவனைப் பற்றீய சரியான அறிவும் வேதாகம அடிப்படை அறிவும் இருந்தால் நாம் எத்தகைய உபதேசங்களையும் இனம் கண்டு கொள்ளலாம். நாம் நம்மை சுத்திகரிக்கும் உபதேசத்தில் இருக்கிறோமா?

No comments:

Post a Comment