Saturday 9 March 2013


அநாதை இல்லங்களுக்கு வரும் பணங்களை குறித்து விழிப்பாக இருந்த முல்லர்

தமது ஏழை அநாதை பிள்ளைகளுக்கு மக்கள் அனுப்பும் காணிக்கை பணங்கள் யாவையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முல்லர் விரும்பவில்லை. தமக்கு அப்படி வரும் பணங்கள் சரியான வழியில் வருகின்றதா என்பதை அவர் அலசி ஆராய்ந்தார். எப்படிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தனக்கு பணங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றது என்பதை அவர் கண்ணும் கருத்துமாக கவனித்தார். அந்தப் பணங்கள் சரியான வழியில் அனுப்பப்படாதிருந்தால் அதை உடனே அனுப்பிய நபருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். சில உதாரணங்களை கவனியுங்கள்.

பணத்தேவைகள் மிக அதிகமாக இருந்த நாட்கள் ஒன்றில் முல்லருக்கு ஒரு பண பார்சல் வந்தது. அந்தப் பணம் யாரிடமிருந்து வந்திருக்கின்றது என்பதை முல்லர் கண்டு கொண்டார். அந்தப் பணத்தை அனுப்பிய ஸ்திரீ கடன்களில் சிக்கியிருந்த ஒரு நபர் என்பது மட்டுமல்ல, அவர்களின் கடன்காரர்கள் தாங்கள் கொடுத்த கடனை திரும்பக்கொடுக்கும்படியாக அவர்களை அனுதினமும் தொந்தரவு செய்து கொண்டிருப்பவர்கள் என்பதையும் முல்லர் கண்டு வைத்திருந்தார். எனவே அந்தப் பணமானது அவர்களுக்குச் சொந்தமான பணம் அல்ல என்பதுவும், அவை எல்லாம் கடன்காரர்களுக்குச் செல்ல வேண்டிய பணம் என்பதையும் முல்லர் அறிந்திருந்தார். அந்த பார்சலை முல்லர் திறந்து கூட பார்க்காமல் அப்படியே அதை அனுப்பிய ஸ்திரீக்கு அனுப்பிவிட்டார். உண்மையில் அப்படி அதை அனுப்பிய அந்த நாளில் முல்லரின் அநாதை இல்லத்தில் அன்றைய நாளுக்குரிய செலவுக்குக்கூட பணம் இல்லாதிருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு சமயம் தேவோன் என்ற இடத்தில் ஒரு இசைக்கச்சேரி நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து அதின் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் முல்லரின் அநாதை குழந்தைகளின் போஷிப்புக்காக அனுப்பியிருந்தனர். அந்தப் பணம் அனைத்தையும் முல்லர் அப்படியே அதை அனுப்பியவர்களுக்கே திரும்ப அனுப்பிவிட்டார். அந்தப் பணத்தை அனுப்பியவர்களின் அன்பு நிறைந்த நல்ல திட்டத்தை முல்லர் ஏற்றுக்கொண்டபோதினும், தேவனுடைய ஊழியங்களுக்கு இந்தவிதமான வழிகளில் பணம் சேகரித்து அனுப்புவதை அவர் விரும்பவில்லை என்றும், பணங்கள் கர்த்தர் விரும்பும் வழிகளில் மட்டும் அருளப்படவேண்டும் என்றும் சொல்லிவிட்டார்.

1853 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 60 வயதான ஒரு விதவை தனக்கு சொந்தமான சிறிய வீட்டை 90 பவுன்களுக்கு விற்று அதை முல்லரின் அநாதை இல்லம் ஒன்றிலிருந்த காணிக்கை பெட்டியில் போட்டுவிட்டாள். அவள் செய்த காரியத்தை அறிந்த அவளுக்கு அன்பானவர்கள் அந்தப்பணத்தில் கொஞ்ச பணத்தை தனது வருங்கால தேவைகளுக்கு வைத்துக்கொண்டு மீதியை முல்லருக்கு கொடுக்க வற்புறுத்தவே அவள் அநாதை இல்லம் வந்து தான் போட்ட பணத்தில் 5 பவுன்களை தனக்கென்று எடுத்துக்கொண்டு மீதி 85 பவுன்களை காணிக்கை பெட்டியில் போட்டாள். இதைக் கேள்விப்பட்ட முல்லர் அந்த விதவைக்கு போக்கு வரத்து செலவுகளுக்கு பணம் அனுப்பி அவளை தம்மண்டை வரவழைத்து காணிக்கை பெட்டியில் போட்ட பணத்தை குறித்து விபரம் கேட்டார். 10 வருடங்களுக்கு முன்பாகவே தனது வீட்டை விற்று வரும் பணத்தை அநாதை இல்லத்திற்கு கொடுப்பதாக கர்த்தருக்குள் நிச்சயித்துக்கொண்டதாக அவள் அவரிடம் சொன்னாள். அப்படி அவள் நிச்சயித்திருக்கும் பட்சத்தில் நண்பர்களின் வற்புறுத்துதலுக்கு இணங்கி பெட்டியில் போட்ட பணத்தில் 5 பவுன்களை தனது தேவைகளுக்காக திரும்ப எடுத்துக்கொள்ள மனம் வந்ததை முல்லர் கர்த்தருக்குள் ஆலோசித்து அவளுடைய பணத்தில் ஒரு சிறிய பகுதியைக்கூட தனது அநாதைகளுக்கு எடுப்பதில்லை என்று சொல்லி விட்டு முழுவதையும் அப்படியே அந்த விதவையிடம் கொடுத்துவிட்டார்.

1867 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு மனிதன் ஒரு சிறிய தொகையை முல்லருக்கு அனுப்பியிருந்தான். அந்தப் பணமானது மற்றொருவருக்கு சேர வேண்டிய பணமாகும். அந்தப் பணத்தை அவன் அந்த மனிதனிடமிருந்து ஏமாற்றியோ, அபகரித்தோ எப்படியோ பெற்றிருந்தான். அந்தப் பணத்தை முல்லருக்கு அனுப்புவதின் மூலம் தான் அபகரித்து எடுத்திருந்த ஆளுக்கு ஈடு கொடுத்து காரியத்தை தேவனுக்கு முன்பாக சரிசெய்து கொண்டதாக அவன் எண்ணியிருந்தான். அந்த தொகை எவ்வளவாக இருந்தாலும் முல்லர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். எந்த ஒரு மனிதன் அபகரிக்கப்பட்டானோ அந்த மனிதனுக்கு முதலாவது அந்தப் பணம் போய்ச் சேர வேண்டும். அந்தப் பணத்தை யார் யாருக்கு கொடுக்க வேண்டுமோ அந்த காரியம் பணத்திற்கு உரியவன் தீர்மானிக்க வேண்டிய காரியமே தவிர அந்தப் பணத்தை திருடிக்கொண்டவன் முடிவெடுக்க வேண்டிய காரியம் அல்ல என்று முல்லர் ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.

1846 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பத்தில் ஒரு சகோதரனிடமிருந்து முல்லருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் முல்லருடைய அநாதைகளுக்கு தேவைப்படும்பட்சத்தில் 200 பவுன்களுக்கு உட்பட்ட ஒரு தொகையை ஒரு வார கால கெடுவில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்று எழுதப்பட்டிருந்தது. முல்லருக்கு கடுமையான பணத்தேவை நிறைந்த ஒரு நேரமாக அது இருந்தது. அப்பொழுது அவர் தனது ஓய்வுக்காக பிரிஸ்டோல் பட்டணத்திலிருந்து வெளியே செல்லுவதாக இருந்தது. தனது அநாதைகளுக்கு 190 பவுன்கள் தேவை என்று கூறி தனது பணியாளை மேற்குறிப்பிட்ட நபரிடம் அனுப்பி பணத்தைப் பெற்றுக்கொள்ள அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு இருந்தபோதினும், அவர் அவ்விதம் செய்யாமல் தனது பிரகாசமான சாட்சியை காத்துக்கொள்ளுவதற்காகவும், தேவனுடைய உலகளாவிய திருச்சபையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கும்படியாகவும் முல்லர் அந்த கிறிஸ்தவ சகோதரனுக்கு அநாதை குழந்தைகளின் தேவை இன்னது என்பதை கர்த்தர் ஒருவருக்கு மாத்திரமே நாங்கள் தெரிவிப்போமே தவிர இவ்வளவு தேவை என்று சொல்லி மனிதர்களிடம் கெஞ்சமாட்டோம் என்று கூறி அந்த அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
 

No comments:

Post a Comment